ரஃபேல் ஒப்பந்தம்! மோடி மீது மக்களுக்கு சந்தேகம் இல்லை! ராகுல் கால்களை வாரிய மூத்த தலைவர்!
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று காங்கிரசின் தோழமை கட்சியான தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளது ராகுலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று காங்கிரசின் தோழமை கட்சியான தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளது ராகுலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் மூலம் மிகப்பெரிய ஊழலை பிரதமர் மோடி செய்துவிட்டார் என்பது ராகுலின் குற்றச்சாட்டு. ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் ஒப்பந்தத்தை பெற்றுத்தந்த காரணத்தினால் திவால் ஆகும் நிலையில் இருந்த அனில் அம்பானிக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை மோடி தூக்கி கொடுத்துவிட்டார் என்றும் ராகுல் தெரிவித்து வருகிறார்.
அதுமட்டும் இன்றி ரஃபேல் ஒப்பந்த விவரங்களை பகிரங்கமா வெளியிட வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்துகிறார். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தம் என்பதால் ரஃபேலில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று மோடியும், நிர்மலா சீதாராமனும் கூறி வருகின்றனர். ஆனாலும் விடாமல் ராகுல் காந்தி இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகிறார். இந்த நிலையில் மோடிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
மராத்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சரத்பவார், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியின் மீது இந்திய மக்களுக்கு எந்த சந்தேகமும் எழவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவரங்களை எதிர்கட்சியினர் வெளியிட வலியுறுத்துவது சுத்த அறிவின்மை என்றும் சரத்பவார் கூறியுள்ளார்.
ஏற்கனவே சரத்பவார் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.கவிற்கு எதிர்கட்சியாகவும், காங்கிரசுக்கு தோழமை கட்சியாகவும் சரத்பவார் கட்சி விளங்குகிறது. அந்த கட்சியின் தலைவரே ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக பேசியிருப்பது ராகுல் காந்திக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.