நாய்க்கடி விபரீதம்... 40 பேரைக் கடித்துவிட்டு உயிரை விட்ட இரண்டரை வயது சிறுமி... அதிர்ச்சியில் கிராம மக்கள்
உத்தரப் பிரதேசத்தில் நாய்க்கடிக்கு உள்ளான இரண்டரை வயது சிறுமி 40 பேரைக் கடித்து வைத்துவிட்டு உயிரிழந்திருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்த இரண்டரை வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார். அந்தச் சிறுமி இறப்பதற்கு முன் சுமார் 40 பேரை கடித்துள்ளார்.
உ.பி.யின் ஜலான் மாவட்டத்தில் உள்ள கோஞ்ச் தெஹ்சிலின் கியோலாரி கிராமத்தில் உள்ள தனது தாய் மாமாவின் வீட்டில் சிறுமி இருந்தபோது தெருநாய் கடித்துள்ளது. அதிலிருந்து அடுத்த பதினைந்து நாட்களுக்குள், சிறுமி 40 பேரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியை கடித்த பின்பு அந்த நாய் இறந்துவிட்டதாகவும் அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்.
நாய் தாக்குதலுக்குப் பிறகு, குடும்பத்தினர் சிறுமியை ஒரு போலி மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் கிராமத்திற்குத் திரும்பியதும், சிறுமிக்கு வெறிநாய்க்கடியின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியது. அப்போதும் அவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று ஊர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடுத்த சில நாட்களில், சிறுமி 40 பேரைக் கடிக்கவோ நகங்களால் பிறாண்டவோ செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சென்ற வெள்ளிக்கிழமை, சிறுமி திடீரென மயங்கி விழுந்திருக்கிறாள். அப்போது குடும்பத்தினர் சிறுமியை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜான்சிக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்துள்ளனர். அங்கு திங்கள்கிழமை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து மருத்துவர் தினேஷ் பர்தாரியா கூறுகையில், “கியோலாரி கிராமத்தில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்துள்ளனர். இருப்பினும், எங்களிடம் போதுமான ரேபிஸ் ஊசிகள் இருப்பதால் பீதி அடையத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நாய்க்கடிக்கு உள்ளான இரண்டரை வயது சிறுமி 40 பேரைக் கடித்து வைத்துவிட்டு உயிரிழந்திருப்பது கியோலாரி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.