வேகமெடுக்கும் கொரோனா... 11 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு... முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உருவாவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றால் மக்கள் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உருவாவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களை விடவும் தற்போது தொற்றின் தீவிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மருத்துவக்கல்லூரிகளை தவிர அனைத்து கல்வி நிலையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். வணிக வளாகங்களில் 100 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் லூதியானா, ஜலந்தர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எவ்வித கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது, இரவு 9 மணி முதல் 6 மணி வரை ஊரடங்கை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. துக்க நிகழ்ச்சிகள், திருமணம் போன்றவற்றில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள் என அனைத்தையும் மூட கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.