மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்... பயணிகளுடன் செல்ஃபி எடுத்து அசத்தல்...!
இதுபோன்ற அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்தும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை தடலாடி ஆய்வுகளை நடத்திவருகிறார்.
புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதையடுத்து தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
கிட்டதட்ட ஓராண்டிற்கு பிறகு மார்ச் 3ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு காலையில் பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை, மற்ற பள்ளிகளில் அந்த திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார். இதுபோன்ற அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்தும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை தடலாடி ஆய்வுகளை நடத்திவருகிறார்.
புதுச்சேரியில் சாலையின் தரம் குறித்து பொதுமக்களிடம் இருந்து அதிக அளவிலான புகார்கள் வந்துள்ளதாக தெரிகிறது. பேருந்து சேவை குறித்தும் புகார்கள் வந்துள்ளன. ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு வந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி-கடலுர் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நின்றார்.அங்கு வந்த தனியார் பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக அமர்ந்து தவளக்குப்பம் வரை பயணித்தார்.
அப்போது உடன் பயணித்த பயணிகளிடம் சாலையின் தரம், பேருந்து சேவை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து நேரில் கேட்டறிந்தார். முதலில் பேருந்தில் நின்று கொண்டு பயணித்த தமிழிசை அங்குள்ள சக பயணிகளின் வேண்டுகோளை ஏற்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.