14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி  சி-47 விண்ணில் ஏவப்பட்டது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் இன்று ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இன்று காலை 9.28 மணியளவில் திட்டமிட்டபடி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. 1625 கிலோ எடை கொண்ட இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாம் தலைமுறை காா்டோசாட்-3 செயற்கோள், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 13 வகை நானோ செயற்கைகோள்கள் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

509 கிலோமீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97 .5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த செயற்கோள் நகர மேம்பாட்டு செயல்பாடுகள் மற்றும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டதாகும். 44 .4 மீட்டர் உயரம் கொண்ட இந்த பி.எஸ்.எல்.வி சி 47 ராக்கெட்டின் முதல்நிலையில் திட பொருளும் இரண்டாம் நிலையில் திரவ பொருளும் நிரப்பப்பட்டுள்ளது. 

ராணுவ எல்லை பாதுகாப்பிற்கும் பேரிடர் பாதிப்பு நேரங்களிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படும் இந்த ராக்கெட் இரவு நேரத்திலும் பூமியை மிகத் தெளிவாக படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.