மீண்டும் வெடித்தது கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா போராட்டம்... 2 பேர் பலி - டார்ஜிலிங்கில் பதற்றம்!!
மேற்கு வங்கத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மூத்தத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வீடு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது. போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வங்கமொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிமாநிலம் கேட்டு போராடி வரம் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
பிஜோன்பரி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் கூர்ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இதையடுத்து நாரியா மோர்ச்சா என்ற மூத்தத் தலைவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியும், பாட்டில்களை எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
காவல்துறை வாகனம் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர்.
பாதுகாப்புப் படையினர் தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சூழ்நிலையை கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா செய்தி ஊடகக் குழுவின் தலைவர் அமீர் ராய் என்பவரின் மகனும், செய்தியாளருமான விக்ரம் ராய் என்பவர் நேற்று நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது