ரூபாய் நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்கு முதலிடம் – ரிசர்வ் வங்கி மீது புகார்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்கு முதலிடம் கொடுப்பதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை புறந்தள்ளுவதாகவும், ரிசர்வ் வங்கி மீது புகார் எழுந்துள்ளது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு புதிதாக 2000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக எல்லா வங்கிகளிலும் கிடைக்கின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டு தனியார் வங்கிகளில் மட்டும் கிடைக்கின்றன.
ஆனால், புதுச்சேரியை பொறுத்தவரை முதலில் ஒரு தனியார் வங்கியில்தான் அந்த புதிய நோட்டுகள் கிடைத்தன. தற்போது வரை பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அந்த புதிய நோட்டுகள் இதுவரை வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
பணத் தட்டுப்பாட்டால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் 2000 ரூபாய் புதிய நோட்டை வைத்து கொண்டு, செய்வதறியாது அவர்கள் திணறுகின்றனர்.
இதுகுறித்து தேசிய மயமாக்கப்பட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி தினமும் பணத்தை பெற்றுக் கொள்ள அழைக்கிறது. அதற்காக டோக்கன்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கி முதலில் டோக்கன் வழங்கியவர்களுக்கு பணத்தை தராமல், தனியார் வங்கிகளுக்கு பணத்தைத் தருகிறது.
புதிய நோட்டுகளையும் தனியார் வங்கிகளுக்கே அதிகளவு தருகிறது. இதன்மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வளர்ச்சியை தடுத்து, தனியார் வங்கிகளின் வளர்ச்சியை மத்திய அரசு ஊக்குவிக்கிறதோ என்ற அச்சமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றனர்.