prison ready for vijay mallya

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டால், மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய அரசு, பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை தொடங்குவதற்காக இந்திய வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் வங்கிக் கடனை திருப்பி செலுத்தவில்லை. அதனால் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து மல்லையாவை கைது செய்யக்கூடிய சூழல் நிலவியதால், முன்னெச்சரிக்கையாக அவர் லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் மல்லையாவை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு, இங்கிலாந்து அரசிடம் முறையிட்டு வருகிறது. 

ஏற்கனவே லண்டனில் இருமுறை கைது செய்யப்பட்டபோதும் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது. 

மல்லையாவை நாடுகடத்தக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை, டிசம்பர் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய சிறைகளில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் அதனால், விஜய் மல்லையாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மல்லையாவின் வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், மல்லையா நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது, மல்லையா நாடு கடத்தப்பட்டால், மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் அடைக்கும் திட்டம் உள்ளதை தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தனர். 

சிறையில் அடைக்கப்படும் நபர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மல்லையா கூறுவது தவறான தகவல். இந்திய சிறைகள், மற்ற நாடுகளில் உள்ள சிறைகளை விட சிறந்தது. சிறை கைதிகளின் உரிமைகளும் முழு அளவில் பாதுகாக்கப்படுகிறது. மும்பை சிறையில், கைதிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதிகளும் உள்ளன. எனவே மல்லையா அங்கு பாதுகாப்பாக இருக்கலாம். 

தனக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே உயிருக்கு ஆபத்து, மனித உரிமை மீறல் போன்ற பொய்களை மல்லையா கூறிவருவதாகவும் தெரிவித்தனர்.