"காந்திக்கு பதில் சவார்கர் படத்தை அச்சிடுங்கள்..." மத்திய அரசுக்கு இந்து மகாசபை கோரிக்கை!
இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி புகைப்படத்தை நீக்கிவிட்டு சவார்கர் படத்தை அச்சிட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபை,
மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்துவா இயக்கங்களின் முன்னோடியாக விளங்குபவர் சவார்கர். இவருக்கு பாரத ரத்னா விருத வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சில அமைப்பினர்
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேற்று சவார்கரின் 135-வது பிறந்தநாள் விழாவை அகில பாரத இந்து மகாசபை சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி புகைப்படத்தை நீக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக சவார்கர் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகாசபை, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை, ரூபாய் நோட்டுகளில் இருந்த நீக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.