ஹமீது அன்சாரிக்கு பிரதமர் மோடி பாராட்டு...
அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடித்து சிறப்பாக செயல்பட்டவர் ஹமீது அன்சாரி என அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்,
துணை ஜனாதிபதியாகவும் மாநிலங்களவை சபாநாயகராகவும் பணியாற்றி வந்த ஹமீது அன்சாரி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து மாநிலங்களவையில் அவருக்கு நேற்று உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அவரைப் பாராட்டி பிரதமர் மோடி பேசியதாவது-
ஹமீது அன்சாரியின் அனுபவங்கள் எனக்கும் பயன்பட்டுள்ளன. அவரது குடும்பம் 100 ஆண்டுகளுக்கும் மேல் பொதுவாழ்வில் ஈடுபட்ட குடும்பமாகும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஓய்வு பெறும் ஹமீது அன்சாரி, மிகச் சிரமமான சபாநாயகர் பணியை சிறப்பாக செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராட்டினார்.
அன்சாரியை பற்றி புகழ்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், அவருக்கு உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், பல்வேறு பட்டங்களை தந்துள்ள போதிலும் அவர் அவற்றை பெருமையாக வெளிப்படுத்திக்கொள்ளவில்லை எனக் கூறினார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம கோபால் யாதவ் தனது உரையில், ஹமீது அன்சாரி எந்த ஒரு கட்டத்திலும் எந்த தரப்பினருக்கும் பாரபட்சம் காட்டாமல் சபாநாயகர் பணியை சிறப்பாக செய்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது பாராட்டு உரையில், ஹமீது அன்சாரி எந்த ஒரு மசோதாவையும் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியபோது நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. இதே போல இனி வரும் மாநிலங்களவை சபாநாயகரும் அவையில் அமளி நிலவும் போது மசோதாவை நிறைவேற்ற மாட்டார் என நம்புகிறேன் என கூறினார்.