தண்ணீரில் தத்தளிக்கும் கேரளா!! ரூ.500 கோடி நிதி.. பிரதமர் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழைக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
2 லட்சத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவிற்கு குடிநீர் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை ஆகிய படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் நிலச்சரிவாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ரூ.19,512 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு கணக்கிட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக நேற்றிரவு திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ விமானத்தில் கொச்சி புறப்பட்டு சென்றார். இன்று கொச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.500 கோடியை ஒதுக்கி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கேரள அரசு சார்பில் ரூ.2000 கோடி ரூபாய் நிதி வேண்டுமென மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.