ரூ.149க்கு இன்டர்நெட்... 250 சேனல்... தொலைபேசி இணைப்பு... அதிரவைக்கும் ஆந்திரா!
இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு ஆந்திராவில் நாளை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
ஆந்திராவில், மாதம் ரூ.149க்கு தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய தள சேவை, 250 சேனல்களுடன் கூடிய தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட உள்ளன. இந்த ஃபைபர் க்ரிட் சேவையை விஜயவாடாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர மாநில முதல்வராக இவர் இரண்டு முறை பணியாற்றிய போது, ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியை மாற்றியவர் சந்திரபாபு நாயுடு. இந்தியாவிலேயே தகவல் தொழில் நுட்பத்தில் அதிக நாட்டமுடையவர். ஒருங்கிணைந்த பல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார். அதுமட்டுமல்லாமல் இன்று தெலங்கானா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே ஆந்திராவில் முதல்முறையாக இவர் கூட்டும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. மேலும் அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
தற்போது ஆந்திர மாநிலம் பிரிந்தபோதும், புதிய ஆந்திர மாநிலத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் தலைநகர் அமராவதியை நிர்மாணித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. இதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் முறையை கல்வி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் சாமானிய குடிமகனின் வீட்டிற்கு இணைய தள சேவையை வழங்க வேண்டுமென்பது சந்திரபாபு நாயுடுவின் நீண்ட நாள் கனவு. இதை தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் அறிமுகபடுதியுள்ளார். இணைய தள சேவை இணைப்பு மட்டுமல்லாமல் தொலைபேசி மற்றும் 250 சேனல்களுடன் கூடிய இணைப்பையும் வழங்க உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அனைத்து குக்கிராமங்களுக்கும் பைபர் கிரேட் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. ரூ. 149க்கு இணைய தள இணைப்பு , 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பு, 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இதன் முதல்கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் முன்னோட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 55 கிராமங்களில் இந்த திட்டம் நாளை முதல் வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் ஆந்திர முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்கள் முதற்கொண்டு 30 லட்சத்திற்கும் மேலான வீடுகளுக்கு பூரணமாக வழங்கப்படும். மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். அதுமட்டுமல்லாமல், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கி வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.