பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி சம்மன் அனுப்ப வேண்டும் – மாயாவதி ஆவேசம்
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி சம்மன் அனுப்ப வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆவேசத்துடன் கூறினார்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கூறியதாவது.
“ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி சம்மன் அனுப்ப வேண்டும். அதில், பொதுமக்கள் படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த முடிவை அறிவிப்பதற்கு முன் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.