புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த்... சொந்த ஊரில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரின் சொந்த ஊரான கல்யான்பூரில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியை வௌிப்படுத்தினர்.
குறிப்பாக கல்யான்பூரில் உள்ள மகரிஷி தயானந்த் விகார் காலணியில் உள்ள கோவிந்த் இல்லத்தின் முன், மக்கள் நேற்று காலை 7மணிக்கே கூட்டமாக கூடத் தொடங்கினர். ஒட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து முன்னிலை அறிவிக்கப்பட்டவுடன், மக்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி தீபாவலி, ஹோலி , தசரா பண்டிகையில் இருக்கும் உற்சாகத்தை வௌிப்படுத்தினர்.
ஒட்டு எண்ணிக்கை தொடங்கியவுடன் கோவிந்த் வழக்கமாகச் செல்லும் போரக்கா கோவிலில் அவரின் ஆதரவாளர்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், யாகம் வளர்த்தும் பிரார்த்தனை செய்தனர்.
கல்யான்பூரைச் சேர்ந்த சஞ்சய் பதாம் கூறுகையில், “ கோவிந்த் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்களுக்கு தீபாவளி, ஹோலி, தசரா பண்டிகையில் இருக்கும் மகிழ்ச்சியை உணர்கிறோம் ’’ என்றார்.
கல்யான்பூரைச் சேரந்த சரிதா என்ற பெண் கூறுகையில், “ கோவிந்த் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கிறது. எங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார்’’ என்றார்.
மேலும், கோவிந்த் படித்த டி.ஏ.வி. கல்லூரியிலும் கொண்டாடத்துக்கு குறைவில்லை, கோவிந்த் வெற்றி பெற்றதுக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர். ஜனாதிபதியாக கோவிந்த் பதவி ஏற்றவுடன், அவரை சிறப்பு விருந்தினராக கல்லூரிக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக கல்லூரி முல்வவ் அமித் குமார் வஸ்தவா தெரிவித்தார்.
கோவிந்துடன் உடன்படித்த நண்பர்களும் தேர்தல் வெற்றியை கொண்டாடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும், கோவிந்த் குடும்பத்தார் வீட்டு முன் மிகப்பெரிய டெண்ட் அமைத்து, அங்கு வரும் அவரின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.