"பசுக்களை கொல்பவர்களை வெட்டுவோம்" - பிரவீன் தொகாடியா சர்ச்சை பேச்சு!
நாடு முழுவதும் பசு பாதுகாவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினர் பசு பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பசு பாதுகாவலர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் போக்கு, உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வென்ற பிறகு வேகம் பிடித்துள்ளது.
இதே போல் ராஜஸ்தான், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது.
அதே நேரத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதையும், சட்டங்கள் மீறப்படுவதையும் அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி அறிவித்தார். சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் மோடி எச்சரிக்கைக்கு வெளியிட்ட மறுநாளே விஷ்வ ஹிந்து பரீஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்டுள்ள பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பசு பாதுகாவலர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதற்காக புனிதப் போராளிகள் படை அமைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் பிரவீன் தொகாடியா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் புனித விலங்கான பசுவை பலிகொடுக்க எக்காரணம் கொண்டும் யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் இந்த பசு பாதுகாப்பு இயக்கத்ததை விரைவில் தீவிரப்படுத்துவோம் என்றும் தொகாடியா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.