prashanth busan condemns about anti romeo

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய டுவிட் செய்த வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான பிரசாந்த் பூஷனுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உ.பி. முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களை ஈவ் டிசிங் செய்பவர்களை பிடிக்க ‘ஆன்ட்டி ரோமியோ’ எனும் போலீஸ் படையை உருவாக்கினார்.

இந்த திட்டத்தை விமர்சித்த எதிர்க்கட்சியினர், அப்பாவிகள் சிலர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என குற்றம்சாட்டினர்.

சர்ச்சை கருத்து

இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், ஸ்வாராஜ் இந்திய கட்சியின் தலைவருமான பிரசாந்த்பூஷன் ஆன்ட்டி ரோமியோ திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதில், “ பெண்களை ஈவ்டீசிங் செய்ததில் மிகவும் பிரதானமானவர் கடவுள் கிருஷ்ண்னர்தான்.ரோமியோ என்பவர் ஒரு காதலிக்காக வாழ்ந்தவர். அப்படிப்பார்த்தால், ஆன்ட்டி ரோமியோ படை என்பதற்கு பதிலாக, ‘ஆன்ட்டி கிருஷ்ணா’ என்று பெயர் வைக்க வேண்டும். அதற்கு உ.பி.முதல்வர்ஆதித்யநாத் தயாரா?’’ எனக் கேட்டு இருந்தார்.

கண்டனம்

இவரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரசாந்த் பூஷன் மீண்டும் வெளியிட்ட டுவிட்டில், “நான் கூறிய ரோமியோ கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. நான் கூறிய கருத்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ெவளியிடவில்லை.’’ என்று தெரிவித்து இருந்தார்.

புகார்

இதற்கிடையே டெல்லி பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் தஜிந்தர் பால் பாகா, உத்தரப்பிரதேச செய்தித்தொடர்பாளர் ஜீஷன் ஹெய்தர் ஆகியோர் தனித்தனியாக பிரசாந்த் பூஷன் மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து கூறினார் என போலீசில் புகார் செய்தனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து லக்னோ போலீஸ் எஸ்.பி. மன்சில் சைனி கூறுகையில், “ பிரசாந்த் பூஷன் மீது கூறப்பட்ட புகாரையடுத்து, அவர் மீது முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டு, 153ஏ, 295ஏ பிரிவின் கீழ்ஹஸ்ராத்கஞ் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும், டெல்லி திலக்மார்க் போலீஸ் நிலையத்திலும், டெல்லி பா.ஜனதா கட்சியினர் சார்பில்பிரசாந்த் பூஷன் மீது புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனநிலை

உத்தரப்பிரதேச பா.ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் சுக்லா கூறுகையில், “ பிரசாந்த்பூஷனின் பேச்சு அவரின் மனநிலையைக் காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாதுஉலகம்முழுவதும் இருக்கும் கிருஷ்ண பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார். இவர்தான் ஒருநேரத்தில் காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல ஒன்று பேசினார். அவர் மீது அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

 ராஜஸ்தான் மாநிலம், சிட்டோர்கார் மாவட்டத்தில், விஸ்வ ஹிந்தி பரிசத் ஆதரவாளர் பங்கஜ்திவாரி என்பவரும் பிரசாந்த் பூஷன் மீது புகார் தெரிவித்துள்ளார். பிரசாந்த் பூஷனின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கிறது எனக்கூறி சிட்டோர்கார் போலீசில் திவாரி புகார் செய்துள்ளார்.