”நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் நான்” - பிரிவு விழாவில் பிரணாப் பெருமிதம்...
நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் நான் என்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஆவணம்தான் இந்திய அரசியல் சட்டம் எனவும் பிரணாப் கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்ற மையத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இந்த விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
அப்போது, பிரிவு உபசார விழாவில் தமக்கு பாராட்டு உரை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் நான் என்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான ஆவணம்தான் இந்திய அரசியல் சட்டம் எனவும் பிரணாப் கூறினார்.
48 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்களரும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர் தான் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்து வருவது கவலை அளிப்பதாகவும், பிரதமர் மோடியுடன் கிடைத்த நட்பும் என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என்றும் பிரணாப் குறிப்பிட்டார்.
மேலும், ஜி.எஸ்.டி கூட்டாட்சியின் அடையாளமாக திகழ்வதாகவும், ஜி.எஸ்.டி நமது வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.