Popular Telugu singer Ghazal Srinivas arrested on charges of sexual harassment

இளம் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக, பிரபல தெலுங்கு பாடகர் கஜல் சீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல தெலுங்குப் பாடகர் கஜல் சீனிவாஸுக்குச் சொந்தமான ஆலயவாணி வெப் ரேடியோவில் பணி புரிந்த பெண் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கஜல் சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். 

கஜல் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர் என்பதால், கஜல் சீனிவாஸ் என்றே அழைக்கப்பட்டவர் இவர். ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தில் இவர் மீது அந்தப் பெண் கொடுத்த புகாரில், சீனிவாஸ் தன்னை நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “சீனிவாஸ் என்னிடம் கடந்த 8 மாதங்களாக தவறாக நடந்து வந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் அவர் மாறவில்லை. அவரின் தொந்தரவு எல்லை மீறியதால்தான் நான் போலீஸில் புகார் அளித்தேன்” என்று கூறியிருந்தார். 

அவர் அளித்த புகாரைப் பதிவு செய்த போலீசார், அந்தப் புகாரின் அடிப்படையில் சீனிவாஸிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு, 76 மொழிகளில் பாடல்களைப் பாடி, காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியை, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் முன்னிலையில் சிறப்பாகச் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்தவர். பல்வேறு மொழிகளில் பாடும் இவரது திறமையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட்டனர். 

எ பிலிம் பை அரவிந்த் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர், இந்தப் புகார் பற்றிக் குறிப்பிடுகையில், “அந்தப் பெண்ணுக்கு அண்மையில் விபத்து ஒன்றில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் என்னை மசாஜ் செய்து விடச் சொன்னார். இது குறித்த மருத்துவ ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை” என்று கூறினார். இந்தச் சம்பவம் தெலுங்கு திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.