சபரிமலையில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவபர்கள் உண்மையான பக்தர்கள் இல்லை என்றும் சில அமைப்புகள் வேண்டுமென்றே அரசியல் செய்ய முயல்வதாகவும் கேரள அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார்.

சபரிமலையில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவபர்கள் உண்மையான பக்தர்கள் இல்லை என்றும் சில அமைப்புகள் வேண்டுமென்றே அரசியல் செய்ய முயல்வதாகவும் கேரள அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐயப்பன் சீசன் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை தடுக்க நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து அமைப்புகள் திரண்டனர். அப்போது ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் அவர்கள் தீவிரமாக சோதித்து அனுப்பினர்.

பெண்கள் யாரும் இருந்தால் அவர்கள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில்தான், ஆங்கில தொலைக்காட்சியைச் சேர்ந்த 3 பெண் நிருபர்கள் அப்பகுதிக்கு வந்தபோது, அவர்களை சபரிமலைக்கு செல்ல மறுத்துவிட்டனர் போராட்டக்காரர்கள். நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகள் ஏராளமானோர் கூடினர். மேலும், தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 

இதனை அடுத்து, அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களைக் களைந்து செல்லும்படி கூறினர். இதனால் அப்பகுதி போராட்டக்களமானது. விரட்டி அடிக்கப்பட்ட எதிர்ப்பாளர்கள் போலீஸ் மீது கல்வீச்சு நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவேன் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவெடுத்துள்ள நிலையில், அதனை தடுக்கும்வகையில் இந்து அமைப்புகள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இது குறித்து அம்மாநில அமைச்சர் ஷைலஜா, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், சில அமைப்புகள் வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை என்றும் அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார்.