கொச்சியில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் வெள்ளிக்கிழமை SFI அமைப்பினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று கோழிக்கோட்டில் உள்ள அலுலவகத்தில் போலீஸ் ரெய்டு நடைபெறுகிறது.
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் அமைந்துள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் SFI அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்துடன் அங்குள்ள ஊழியர்களையும் மிரட்டியச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஏசியாநெடி நியூஸ் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு நடைபெறுகிறது. இடது ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பி. வி.அன்வர் கொடுத்த புகாரின் பேரில், கோழிக்கோடு வெல்ல போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வெள்ளயில் சிஐ பாபுராஜ், நடக்காவ் சிஐ ஜிஜீஷ், டவுன் எஸ்ஐ வி.ஜிபின், ஏஎஸ்ஐ தீபாகுமார், சிபிஓக்கள் தீபு, அனீஷ், சஜிதா, சைபர் பிரிவு அதிகாரி பிஜித், ஆகியோர் அடங்கிய தனிப்படையுடன் தாசில்தார் சி. ஸ்ரீகுமார், புதியங்கடி கிராம அலுவலர் எம். சாஜன் ஆகியோரும் சோதனையின்போது உடன் இருக்கின்றனர்.
"ஏசியாநெட் நிறுவனம் இது குறித்து முறையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். தவறுகளை அம்பலப்படுத்துவதில் செய்தியாளர்களுடன் உறுதியாக இருக்கிறோம். நேர்மை மற்றும் உறுதியுடன் இடைவிடாமல் போராடுவோம்" என்று ஏசியாநெட் நியூஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் கல்ரா உறுதி கூறியுள்ளார்.
உதவி கமிஷனர் சுரேஷ் தலைமையில் நடத்தப்படும் இந்த ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது என்று ஏசியாநெட் நியூஸ் மண்டலத் தலைவர் ஷாஜஹான் தெரிவித்தார்.
