பிரதமர் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று திருப்பூரை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாளை பாரட்டினார். தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக அளிக்க உண்மையிலேயே மிகப்பெரிய மனது வேண்டும் என்று புகழாரம் சூட்டினார். 

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நமது வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30-ஆம் தேதி என்பது அண்ணல் அளித்த கற்பித்தலை மீண்டும் நினைவில் கொள்ள வைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் நாம் நமது குடியரசு திருநாளை கொண்டாடினோம். அப்போது டெல்லியில் ராஜ்பாத்தில் தைரியம் மற்றும் திறமைகளை பார்த்தோம் இவை அனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் அளித்தன. இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவமும் நிறுவப்பட்டுள்ளது. இது தேசம் எங்கிலும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று மக்கள் ஆனந்தப்பட்டார்கள்.

இந்தியா கேட்டிற்கு அருகே அமர்ஜவான் ஜோதி இதன் அருகிலேயே தேசிய போர் நினைவு சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டு மக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களில் கண்களில் கண்ணீர் நிரம்பியது என்றார்

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் அவர்களின் எடுத்துக்காட்டு மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. தாயம்மாள் அவர்களிடத்தில் அவருக்கென எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தது. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும் தாயம்மாள் அவர்கள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இவருடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படித்து வந்தார்கள். இந்நிலையில் பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாள் அந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்து போது அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைபட்டுப் போனது. இதன் பிறகு தாயம்மாள் அவர்கள் செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது, இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்த தாயம்மாள், தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படி செய்ய மிகப்பெரிய மனது வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

இதுக்குறித்து தாயம்மாளிடம் கேட்ட போது, இந்தப் பள்ளியில்தான் எனது கணவர், எனது குழந்தைகள் எல்லோரும் படித்தனர். அவர்கள் படித்த இப்பள்ளி நல்ல முறையில் வளரவேண்டுமென நினைத்தேன். இதற்காக எனக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது, எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு என் நன்றி என்று பெருந்தன்மையாக கூறினார்.