மகாராஷ்டிராவில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று வாக்கு கொடுத்துள்ளார். 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இவற்றில் மகாராஷ்டிரா மாநிலம் தான் மழை வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்துவருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு விதர்பா பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் மகாராஷ்டிர மாநிலம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மீளத்தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Scroll to load tweet…