Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் பயணம்!

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கவுள்ளார்

PM Modi to visit uttar pradesh and jaipur today inaugurate and lay foundation for development projects in Bulandshahr smp
Author
First Published Jan 25, 2024, 9:45 AM IST

பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:45 மணியளவில், புலந்த்ஷரில் ரூ.19,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

மாலை 5.30 மணியளவில் ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை வரவேற்கும் பிரதமர் மோடி, ஜந்தர் மந்தர், ஹவா மஹால், ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் இணைந்து பார்வையிடுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷரில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது, புதிய குர்ஜா – புதிய ரேவாரி இடையேயான 173 கிலோமீட்டர் நீளமுள்ள மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையைப் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மேற்கு மற்றும் கிழக்கு சிறப்பு சரக்கு வழித்தடப் பிரிவுகளுக்கு இடையே முக்கியமான இணைப்பை இது ஏற்படுத்துகிறது. உலகிலேயே முதலாவதான இந்த சுரங்கப்பாதை இரட்டை அடுக்குப் பெட்டக ரயில்களைத் தடையின்றி இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சரக்கு வழித்தடத்தில், சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் ரயில்களின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தேசிய வாக்காளர் தினம்.. ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?

மதுரா – பல்வால் பிரிவு மற்றும் சிபியானா புசுர்க் – தாத்ரி பிரிவை இணைக்கும் நான்காவது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தப் புதிய வழித்தடங்கள் தெற்கு மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவுடன் தேசிய தலைநகருக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

அதேபோல், பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அலிகார் முதல் பத்வாஸ் வரையிலான நான்கு வழிப்பாதை தொகுப்பு - 1 (தேசிய நெடுஞ்சாலை 34-ல் அலிகார்-கான்பூர் பிரிவின் ஒரு பகுதி), ஷாம்லி வழியாக மீரட் முதல் கர்னால் எல்லையை அகலப்படுத்துதல், தேசிய நெடுஞ்சாலை 709 தொகுப்பு-2ல் ஷாம்லி-முசாபர்நகர் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைத்தல் ஆகிய சாலை திட்டங்கள். ரூ. 5000 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்தியன் ஆயிலின்  துண்ட்லா – கவாரியா குழாய் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 255 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் குழாய்த் திட்டம் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மதுரா, துண்ட்லா ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகளுடன் கூடிய பரவுனி-கான்பூர் குழாயின் கவாரியா தி-பாயின்ட் வரை பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும், துண்ட்லா, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விநியோக வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உதவும்.

மக்களவை தேர்தல் 2024: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி!

கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில் நகரியத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.1,714 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், 747 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்களின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. தெற்கில் கிழக்கு புறவழி விரைவுச் சாலை மற்றும் கிழக்கில் டெல்லி-ஹவுரா அகல ரயில் பாதை ஆகியவை சந்திக்கின்றன.  நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே (5 கி.மீ), யமுனா எக்ஸ்பிரஸ்வே (10 கி.மீ), டெல்லி விமான நிலையம் (60 கி.மீ), ஜேவர் விமான நிலையம் (40 கி.மீ), அஜய்ப்பூர் ரயில் நிலையம் (0.5 கி.மீ) மற்றும் புதிய தாத்ரி டி.எஃப்.சி.சி நிலையம் (10 கி.மீ) ஆகிய பன்முக இணைப்புக்கான பிற உள்கட்டமைப்புகள் இந்த திட்டத்தின் அருகில் இருப்பதால் இந்த இடம் தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ.460 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டுமானம் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மதுரா கழிவுநீர் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தப் பணியில் மசானியில் 30 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், டிரான்ஸ் யமுனாவில் தற்போதுள்ள 30 மில்லியன் லிட்டர் மற்றும் மசானியில் 6.8  மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 20  மில்லியன் லிட்டர் டி.டி.ஆர்.ஓ ஆலை (மூன்றாம் நிலை சுத்திகரிப்பு மற்றும் எதிர் சவ்வூடு பரவல் ஆலை) கட்டுமானம் ஆகியவை அடங்கும். மொராதாபாத் (ராம்கங்கா) கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சுமார் 330 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், 58 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கீழ், சுமார் 264 கி.மீ நீள கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் மொராதாபாதில் ராம்கங்கா நதியை சுத்திகரிக்கும் ஒன்பது நிலையங்கள் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios