பிரதமர் மோடி நாளை சீனா பயணம்…. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்
சீனாவில் ஜியாமென் நகரில் நாளை தொடங்கும் ‘பிரிக்ஸ்’ நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பெங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்லாம் பகுதியால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 73 நாட்களாக பதற்றம் நீடித்து வருவதால், அது தொடர்பாக இது நாட்டு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
5 நாடுகளின் தலைவர்கள்
சீனாவின் புஜியான் மாநிலம், ஜியாமென் நகரில் நாளை முதல் 3 நாட்களுக்கு ‘பிரிக்ஸ்’ (பிசேில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த மாட்டின் இடையே சீன அதிபர் ஜீ ஜிங்பென்னுடன், பிரதமர் மோடி நேருக்கு நேர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்லைப்பகுதியான டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க கடந்த 16-ந்தேதி முயற்சித்தது. அது முதல் இருநாடுகளின் ராணுவத்தினருக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் பேட்டி அளித்த வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம், சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்று கேட்கப்பட்டது.
சந்திக்க வாய்ப்பு
அதற்குப் பதில் அளித்த அவர், ‘‘பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு போன்ற சர்வதேச மாநாடுகள் நடைபெறும்போது பல நாட்டுத் தலைவர்களைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவது வழக்கமான நடைமுறை. அதன்படி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேச அதிக வாய்ப்புள்ளது’’ என்றார்.
சீனாவின் கருத்து பற்றி...
பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் கவலைகள் தொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிப்பது பொருத்தமாக இருக்காது என்று சீனா கருத்து தெரிவித்திருப்பது குறித்தும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ‘‘பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச மாநாடுகளுக்கு அரசு எடுத்துச் செல்லும்'’ என்று அவர் பதிலளித்தார்.
மோடி கருத்து
இதற்கிடையே பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்ட கருத்தில், “ கோவாவில் கடந்த ஆண்டு நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் விளைவுகளையும், பலன்களைம் அறிய ஆவலாக இருக்கிறேன். இந்த முடிவுகள் உறவுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். சீனாவின் தலைமையில், பிரிக்ஸ் மாநாட்டில், ஆக்கப்பூர்வமான விவாதங்கள், சாதகமான முடிவுகள் வரும் என எதிர்பார்க்கிறேன். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும், தொழில்துறையின் தலைவர்களுடனும் நாங்கள் சந்தித்து பேச இருக்கிறோம்.மேலும், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 5-ந்தேதி நடத்தும் வளர்ந்துவரும் சந்தை மற்றும் வளரும் நாடுகளுக்கான பேச்சு குறித்த மாநாட்டில் 9 நாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
மியான்மர் பயணம்
இதற்கிடையே சீனாவில் இருந்தவாறு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி மியான்மர் நாட்டுக்கு முதல் முறையாகச் செல்கிறார். அங்கு அந்நாட்டின் வௌியுறவு அமைச்சர் ஆன்-சான்-சூகி, அதிபர் யூ-ஹிதின்-கியாவைச் சந்தித்து பேச்சு நடத்துகிறார். மேலும், அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான நேபி,யங்கன், பாகன் ஆகிய நகரங்களுக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.