'இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்'..! கோத்தபய ராஜபக்சேவை வாழ்த்திய பிரதமர் மோடி..!
இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிட கோத்தபய ராஜபக்சே, புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி இலங்கையின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார். நேற்று இரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. இருவரும் மாறிமாறி முன்னிலை வகிக்கவே போட்டி கடுமையாக இருந்தது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் முழுவதிலும் சஜித் பிரேமதேசாவே அதிக வாக்குகள் பெற்றிருந்தார். சிங்களவர்களின் பகுதியில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை வகிக்க இறுதியில் 50 சதவீத வாக்குகளை கடந்த நிலையில் அவர் வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சுஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே புதிய இலங்கை அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இலங்கை அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இருநாடுகளின் நல்லுறவு மற்றும் இருநாட்டு மக்களின் அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்காக இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.