குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பருச் மாவட்டம் தஹேஜ் தொழிற்பேட்டை பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் இரவுப் பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 5 மணியளவில திடீரென ரசாயன உலை வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரூச் போலீஸ் எஸ்பி லீனா பாட்டீல் கூறுகையில், இறந்த தொழிலாளர்கள் 6 பேரும் வெப்பம் அதிகம் உள்ள இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தனர். கெமிக்கலை காய்ச்சி ஊற்றும் போது திடீரென ரசாயன உலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உலைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த 6 பேரும் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் குஜராத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டதோடு நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
