Piren Singh was sworn in as the Chief Minister of Manipur - is the first ever BJP rule

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரேன் சிங் முதல்வராக நேற்று பதவி ஏற்றார். அந்த மாநிலத்தில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிறுகட்சிகளின் ஆதரவுடன், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

பா.ஜனதா ஆட்சி

 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும்,பாரதிய ஜனதா கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. மற்ற கட்சிகள் 11 இடங்களைப் பெற்று இருந்தன. ஆனால், தனிப் பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு இல்லை.

அதே சமயம், சிறிய கட்சிகளான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள்கட்சி(என்.பி.பி.), லோக் ஜனசக்தி கட்சி(எல்.ஜே.பி.), நாகா மக்கள்முன்னணி(என்.பி.எப்.) ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாரதிய ஜனதா அங்கு ஆட்சி அமைத்துள்ளது.

பதவி ஏற்பு

தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையில் நேற்று பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா, என். பிரேன் சிங்குக்கு முதல்வராகப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். அவருடன் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதல்வராக தேசியி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒய். ஜோய் குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர்கள்

அமைச்சர்களாக பிஸ்வஜித் சிங்(பா.ஜனதா), எல். ஜெயந்த்குமார் சிங், எல்.ஹவோகிப், என். கயிசில்(என்.பி.பி.), திகோ(என்.பி.எப்.), கரம் சியாம்(எல்.ஜே.பி.) ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ்,அசாம் அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான இபோபி சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விமானத்தில் கோளாறு

பாரதியஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் புறப்பட்ட விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடுவழியில் விமானம் திருப்பப்பட்டு, டெல்லியில் தரையிறக்கப்பட்டது. இதனால், இவர்கள் பயணம் ரத்து செய்யப்பட்டது.