மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி அவர் முகதுடன் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளது. அதில் தங்களது பிராண்ட் ‘லோகோ’ பயன்படுத்தப்படிருப்பதற்கு ‘போன் பே’ நிறுவனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநில தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக அரசும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இரு கட்சிகளும் கர்நாடக பாணியில் போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி வரும் நிலையில், அவரது முகம் பதித்த போஸ்டர் ஒன்றை மாநிலம் முழுவதும் ஒட்டியுள்ளது. அந்த போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், ஆன்லைனில் பணம் செலுத்த பயன்படுத்தப்படும் க்யூஆர் (QR code) கோடில் முதல்வர் சிவராஜ் சவுகானின் படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேல் ‘போன் பே’ என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மேலும் அதில் "இங்கே 50% கமிஷன் செலுத்தி உங்களது வேலையை முடித்துக் கொள்ளுங்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ‘போன் பே’ தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஓர் அரசியல் கட்சி அல்லது அரசியல் சாராத 3வது நபர்களோ யாரும் எங்களது லோகோவை (LOGO) அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.

போன்பே லோகோ (Phone Pe) எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையாகும். ‘போன் பே’-யின் அறிவுசார் சொத்து உரிமைகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. உடனடியாக, எங்கள் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் லோகோவுடன் இருக்கும் போஸ்டர்களை உடனடியாக நீக்கும்படி மத்தியப் பிரதேச காங்கிரஸை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred