உயிரிழந்த தொழிலாளர்களின் பி.எப். கணக்குகளில் இருந்து சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு 7 நாட்களில் டெபாசிட் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மண்டல அலுவலகங்களுக்கான பி.எப். நிதிஅமைப்பு நேற்று அனைத்து அலுவலங்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பியது. 

இதேபோல், பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள் அவர்கள் ஓய்வுபெறும் முன்பாகவே பி.எப். டெபாசிட் தொகை முழுவதையும் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவப்பில் கூறியிருப்பதாவது:

பி.எப். அமைப்பு தொடர்பாக டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவுகளின் அடிப்படையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆய்வு மேற்கொண்டார்.

இதன்படி, ஓய்வு பெறும் தொழிலாளர்கள், பணியின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பி.எப். தொகையை மிக விரைவாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் மூலம் பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்கள், ஓய்வு பெறும் நாளிலோ, அல்லது அதற்கு முன்னதாகவோ பி.எப். டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல, பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த 7 நாட்களுக்குள் பி.எப். டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.