குஜராத்தை அடுத்து மத்தியப் பிரதேசமும் குறைத்தது! பெட்ரோல் விலை குறைந்தது!
நாடு முழுதும் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பதாக பொது மக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு வாட் வரிவிதிப்பு ஒரு காரணம் என்று கூறப்பட்டது. மத்திய வரி விதிப்பு ஒருபுறமும், மாநிலங்களின் வாட் வரிவிதிப்பு ஒரு புறமும் என இரட்டை வரி விதிப்பால், பெட்ரோல் டீசல் விலை அதிகம் உயர்ந்து காணப்படுகிறது.
ஆசிய நாடுகளில் பலவற்றில், இந்தியாவில்தான் அதிகம் என்று கூறப்பட்டதால், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மத்திய அரசின் சார்பில் விதிக்கப்படும் வரியில் குறைக்கப்பட்டு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இதையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடிதம் எழுதினார்.
அதில், மத்திய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இதனால், மாநிலங்களும் வாட் வரி விதிப்பில் சிறிது குறைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதை ஏற்று, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக., ஆளும் மாநிலங்களில் வரி விகிதம் சிறிது குறைக்கப்பட்டது. ஆனால், குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், இவ்வாறு குறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அதே வழியில் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 5 சதவீதமும் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதமும் குறைக்கப்படுவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.