தினம் தினம் பெட்ரோல் விலை நிர்ணயம்... அன்றே சொன்னது நியூஸ்ஃபாஸ்ட்..... - அறிவிச்சுட்டாங்க இன்று..
சர்வதேச சந்தை போல, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
வரும் மே மாதம் 1-ந்தேதி முதல் புதுச்சேரி, விசாகப்பட்டிணம், ராஜஸ்தான், ஜாம்ஷெட்பூர்,சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் மட்டும் இந்த விலை மாற்றம் சோதனை முயற்சியாக நடைமுறைக்கு வருகிறது. அதன்பின் படிப்படியாக நாடுமுழுவதும் விரிவு படுத்தப்படும்
இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது, இந்த முறை இனி நாள்தோறும் மாறும்.
58 ஆயிரம் நிலையங்கள்
நாட்டில் உள்ள கச்சா எண்ணெய் சந்தையில் 95 சதவீதத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்கள் வைத்துள்ளன. ஏறக்குறைய 58 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் நாட்டில் உள்ளன.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பி.அசோக் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது-
5 நகரங்கள்
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதில் சோதனை முயற்சியாக புதுச்சேரி, விசாகப்பட்டிணம்,(ஆந்திரா) உதய்பூர்(ராஜஸ்தான்),ஜாம்ஷெட்பூர்(ஜார்கண்ட்), சண்டிகர் ஆகிய நகரங்களில் மே 1-ந்தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்பின் படிப்படியாக நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும்.
நவீன தகவல் தொழில்நுட்பம்
இந்த திட்டத்தின்படி சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய், அமெரிக்க-இந்திய ரூபாய் மாற்றத்துக்கு ஏற்பவும் ஏற்ப பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை தினம் தினம் மாறும். சர்வதேச அளவில் ஏற்படும் விலை மாற்றத்தை உடனுக்குடன் நாடு முழுவதும் உள்ள டீலர்களுக்குதெரிவிக்கும் தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் வந்துவிட்டன. அதனால், நிச்சயம் இந்த திட்டம் சாத்தியமாகும். ஆனால், இந்த திட்டம் ஒரு மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் ’’ என்றார்.
ஆனால், மே 1-ந்தேதி நடைமுறைக்கு வருவது உறுதி என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிக எளிதானது
நாட்டில் உள்ள பெரும்பாலான பெட்ரோல், டீசல் முகவர்கள் அனைவரும் எண்ணெய் நிறுவனங்களுடன் டிஜிட்டல் முறையில் தொடர்பில் இருக்கிறார்கள். பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல்விலையை நாள்தோறும் மாற்றும் போது அதை அனைத்து 53 ஆயிரம் முகவர்களுக்கும் தெரியப்படுத்துவது என்பது தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் மிக எளிதானது.
பாதிப்புகள் ஏற்படாது
15 நாட்களுக்கு ஒருமுறை விலையை மாற்றும்போது, சில நேரங்களில் அதிக அளவு குறைக்கப்படலாம் அல்லது அதிகரிக்கப்படலாம். ஆனால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படும் போது, சில பைசாக்கள் மட்டுமே மாறும். சில பைசாக்கள் உயர்ந்தாலும் மக்கள் கவலைப்பட மாட்டார்கள். சில பைசாக்கள் குறைத்தாலும் அது பெரிய அளவில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வரும் நாள்தோறும் மாற்றி அமைக்கப்படும் விலையால் மக்களுக்கும், முகவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.