தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்துவதற்கு தமிழக மக்கள் பெரிய போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும், விலங்குகள் நலவாரியமான பீட்டா அமைப்பு, ஜல்லிக்கட்டுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகை என்பது இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள் அந்த நாளில் மாடுகளை துன்புறுத்தக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது மாடுகளை கொடுமைப்படுத்தும் செயல், இதன் மூலம் மனிதர்களும், மாடுகளும் காயமடைந்து, உயிரிழப்புகளை சந்திக்கிறார்கள் என்றுபீட்டா அமைப்புத் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, தீர்ப்பளிக்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அ.தி.மு.க.அரசும், எதிர்க்கட்சியான தி.மு.க. அரசும் கோரிக்கை விடுத்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன. மாநிலத்தில் பல்வேறு மாவடங்களில் இளைஞர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கைதாகி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், விலங்குகள் நலவாரியமான பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது.
அது குறித்து பீட்டா இந்தியா அமைப்பின் விலங்குகள் விவகார இயக்குநர் மணிலால் வலியாட்டே கூறுகையில், “ பொங்கல் பண்டிகை என்றால் இயற்கைக்கு நன்றி செலுத்துதல் என்று பொருள். இந்த நாளில் கடவுளை வணங்கலாம், இனிப்புளை பரிமாறிக்கொள்ளலாம், மாடுகளை அலங்காரம் செய்யலாம். ஆனால், இந்த நாளில் மாடுகளை ஆத்திரமூட்டும், கொடுமைப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துகிறீர்கள்.
இந்திய விலங்குகள் வன்கொடுமைச்சட்டம் 1960-ன்படி, மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு ஆகியவற்றை 2011ம் ஆண்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தடை செய்து விட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ள அனைத்து காளைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பில் மாட்டு வண்டி பந்தயம், காளைச்சண்டை, ஜல்லிக்கட்டு ஆகியவற்றை நடத்துவது இந்திய சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டும், கோவாவில் காளைச்சண்டையும்,மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எருதுப்பந்தயமும் அதிகமாக நடக்கிறது.
இயற்கைசூழல்களான காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்தியாவில் பல ரகமான மாடுகளை மக்கள் வளர்த்து வருகிறார்கள். ஆனால், எந்த ரகத்தில் மாடுகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்பதை பால் வளத்துறைதான் தீர்மானிக்கிறது. நாட்டில் பாரம்பரிய மாட்டினத்தை பாதுகாப்பது குறித்து அறிவியல் ரீதியாக அரசு தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மதச்சாயம் பூசப்பட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது.இந்துக்கள் மாடுகளை தெய்வமாக வணங்குகிறார்கள், சிவனின் அருகில் நந்தியாகப் போற்றுகிறார்கள். ஆனால், மாடுகளுக்கு ஆதரவாக பேசமறுக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுப்போட்டியின் போது மாடுகளை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து, அதற்கு ஆத்திரமூட்டும் சூழலை உண்டாக்கி, அதை வலுக்கட்டாயமாக ஓடவைத்து அந்த மாட்டின் உயிருக்கும், அதை அடுக்கும் மனிதர்கள் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கப்படுகிறது.
இந்த போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் ஓடும்போதும், தடுப்புகளில் மோதி பலர் காயம் அடைகிறார்கள், உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இதை கண்காணிப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர். கடந்த 2010 முதல் 2014 வரை 1100 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர். ஆதலால் ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கக்கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST