பிரதமர் மோடியுடன், சுவிட்சர்லாந்து அதிபர் சந்திப்பு ...பருவநிலை மாறுபாடு, பாரீஸ் ஒப்பந்தம் குறித்து பேச்சு
டெல்லி வந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டு அதிபர் டோரிஸ் லூதார்டு, பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு நாடுள் உறவு குறித்தும், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், பருவநிலை மாறுபாடு, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.
சுவிட்சர்லாந்து நாட்டு அதிபர் டோரிஸ் லூதார்டு 3 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று வந்தார். அவருடன் மூத்த அதிகாரிகளும், அந்தநாட்டு தொழில் அதிபர்கள், பெரிய நிறுவனத் தலைவர்களும் உடன் வந்துள்ளனர். விமானநிலையத்தில் அவரை வௌியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதன்பின் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை அதிபர் டோரிஸ் லூதார்டுக்கு ஏற்றுக்கொண்டார். அங்கிருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற அதிபர் டோரிஸ் லூதார்டை பிரதமர் மோடியும், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தும் வரவேற்றனர்.
அதன்பின், வௌியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன், அதிபர் டோரீஸ் லூதார்டு இரு தரப்பு நாடுகள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தனர்.
இதற்கு முன், கடந்த 1998, 2003, 2007 ம் ஆண்டுகளில் மட்டுமே சுவிட்சர்லாந்து நாட்டு அதிபர் இந்தியா வந்துள்ளார். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் வந்த அதிபர் லூதார்டு என்பது குறிப்பிடத்தக்ககது.
பிரதமர் மோடியைச் சந்தித்த அதிபர் டோரீஸ் லூதார்டு இரு நாட்டு உறவுகள், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புபணம் விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல், வரி ஏய்ப்பை கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்கு உதவுதல், அணுசக்தி ‘சப்ளை’ குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்க்க ஆதரவு அளித்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதன்பின், இரு தலைவர்களும் கூட்டாக ஊடங்களுக்கு அறிக்கை வௌியிட்டனர். அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
எங்களின் இந்த உரையாடலில், பருவநிலை மாறுபாடு, அதன் பாதிப்புகள், சமூகத்தில் எதிர்மறையான பாதிப்பு, பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பெட்ரோலியஎரிபொருட்களை குறைத்து, புதுப்பிக்கத் தக்க சக்திக்கு மாறுவது குறித்தும் பேசினோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
முன்பாக, அதிபர் லூதார்டு, மும்பை மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.