பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் கன்னையாகுமார்... பீகாரில் திடீர் திருப்பம்..!
தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்காது என்று சட்ட நிபுணர்கள் கூறியதால், கன்னையாகுமார் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். ஆனால், கன்னையாகுமாரை தேர்தலில் ஆதரிக்க சிறையில் உள்ள லல்லுவிடம் பேசிய பிறகே முடிவு செய்யப்படும் என்று லல்லு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தேசத் துரோக வழக்குக்கு ஆளான கன்னையாகுமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் களமிறங்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த கன்னையாகுமார் மீது 2016ல் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பிரபலமான கன்னையாகுமார், மத்திய அரசை விமர்சித்து பேசத் தொடங்கினார்.
இந்நிலையில் பீகாரில் லல்லு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட கன்னையாகுமார் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பீகாரில் தனது சொந்த தொகுதியான பெகுசாராயில் போட்டியிட அவர் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசத்துரோக வழக்கு தொடர்பான வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டன.
தீர்ப்பு வராத நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்காது என்று சட்ட நிபுணர்கள் கூறியதால், கன்னையாகுமார் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். ஆனால், கன்னையாகுமாரை தேர்தலில் ஆதரிக்க சிறையில் உள்ள லல்லுவிடம் பேசிய பிறகே முடிவு செய்யப்படும் என்று லல்லு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.