காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவியா?...23 இடங்களில், மத்திய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை
காஷ்மீரில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக பிரிவினைவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதி உதவி செய்ததா? என்பதை கண்டறிய, 23 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
நிதி உதவி
இந்தியாவில் செயல்பட்டுவரும் பிரிவினைவாத குழுக்களுக்கு காஷ்மீரில் நாசவேலை மற்றும் சதிச்செயல்களில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் நிதி உதவி செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. இந்த வாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
அதிரடி சோதனை
அதன்பின் அந்த அமைப்பின் புலனாய்வு அதிகாரிகள், பலத்த பாதுகாப்புடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காஷ்மீர், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள 23 இடங்களில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கிலானியின் உறவினர்
காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவரான சையத் அலி ஷா கிலானியின் மருமகன் அலதாப் பந்தோஷ், வர்த்தக பிரமுகர் ஜாகூர் வதாலி, மிர்வாஸ் உமர் பரூக் தலைமையிலான அவாமி செயல் குழுவின் தலைவர் சாகித் உல் இஸ்லாம், ஹுரியத் மாநாடு பிரிவினைவாத அமைப்பின் இரு குழுக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் சில இரண்டாம் கட்ட தலைவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
நயீம்கான் உள்ளிட்ட 3 பிரிவினைவாத இயக்க தலைவர்களிடம் சமீபத்தில் டெல்லியில் விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில் நேற்றைய சோதனை நடந்துள்ளது. ரகசிய கேமிரா புலனாய்வு (ஸ்டிங் ஆபரேஷன்) நடவடிக்கை ஒன்றின்போது பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத குழுக்களிடம் இருந்து நயீம்கான் பணம் பெற்ற காட்சி அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக
காஷ்மீரில் கடந்த 1990களில் தீவிரவாதம் மிகவும் மோசமாக தலை தூக்கத் தொடங்கியபின் மத்திய புலனாய்வு அமைப்பு ஒன்று பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி குறித்து சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏற்கனவே கடந்த 2002-ம் ஆண்டில் வருமான வரித்துறையினர் கிலானி உள்ளிட்ட பிரிவினைவாத இயக்கத்தலைவர்களிடம் சோதனை நடத்தி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். ஆனால், சிரிமினல் வழக்குகள் எதுவும் இது தொடர்பாக பதிவு செய்யப்படவில்லை.
ரூ.1.5 கோடி ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல்
என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ரூ.1.5 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பிரிவினைவாத தலைவர்கள் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பூர்வாங்க விசாரணை நடத்திய அவர்கள் ஹவாலா டீலர்கள் 8 பேரிடம் சோதனை நடத்தி இருந்தனர்.