காதலித்த காரணத்திற்காக கண்களை தோண்டி எடுத்த தந்தையும் 4 சகோதரர்களும்; பாகிஸ்தானில் நடந்த கொடூரச்சம்பவம்
பாகிஸ்தானை சேர்ந்தவர் அப்துல் பகி. 22 வயதான இவர் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அந்த பெண்ணையே தான் திருமணம் செய்ய விரும்புவதாக தன் குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அப்துல் பகி-ன் தந்தையும் சகோதரர்களும் பகி-ன் கண்களை ஸ்பூனை கொண்டு தோண்டி எடுத்துள்ளனர்
வலியால் பகி கதறி அழுதபோது இது தான் உனக்கு தண்டனை என கூறி இருக்கின்றனர். உனக்கு தரப்பட்டிருக்கும் தண்டனை இந்த ஊரில் உள்ளவர்களுக்கும் பாடமாக அமையும் என்று வேறு கூறியிருக்கின்றனர்.
அப்துல் பகி-ன் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரின் இன்னொரு சகோதரனை அழைத்து விஷயத்தை தெரிவித்திருக்கின்றனர். வெளியில் சென்றிருந்த அவர் வந்து பகியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருக்கிறார். மருத்துவமனை செல்லக்கூட பணம் இல்லாமல் இருந்த இந்த இருவருக்கும் அக்கம்பக்கத்தினர் தான் பணம் கொடுத்து உதவியிருக்கின்றனர்.
என்னதான் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பகி-ன் கண்பார்வை திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. என தெரிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்துல் பகி-ன் தந்தை மற்றும் இரு சகோதரர்களை கைது செய்திருக்கின்றனர். மேலும் தலைமறைவாகியிருக்கும் இரண்டு சகோதரர்களை தேடி வருகின்றனர். காதலித்ததற்காக அப்துல் பகி-க்கு நடந்திருக்கும் இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.