அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்! இந்திய வீரர் மரணம்! பதிலடி கொடுத்துவரும் இந்திய ராணுவம்..!
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியல் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. திடீரென இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறலை நிறுத்துமாறு இந்திய தரப்பில் பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.