'மோடி பக்கோடா, அமித் ஷா பக்கோடா' விற்ற இளைஞர்கள் கைது!
பக்கோடா விற்றாலும் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா என்று விற்பனை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது வேலையின்மை குறித்து பேசுகிறார்கள். இந்த தொலைக்காட்சி நிலையத்துக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால்கூட நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு, இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல, பல்வேறு மாணவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தை கூறியிருந்தது.
இது தொடர்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக அலுவலகம் முன் படித்த இளைஞர்கள், பக்கோடா விற்பனை செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி, நேற்று பெங்களூருவுக்கு வருகை தந்தார். பாஜக பேரணி நடக்க இருந்த பேலஸ் சாலை அருகே இளைஞர்கள் பலர் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்து, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பட்டதாரி உடையில், அவர்கள் சாலைகளில் மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா என்று கூவிக்கூவி பக்கோடா விற்றனர். பாரதிய ஜனதா பொதுக் கூட்டம் நடந்த அரண்மனை மைதானத்தின் அருகேயே, மாணவர்கள், பக்கோடா விற்பனை செய்தனர்.
மோடியின் வருகைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மோடி பக்கோடா, அமித் ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா என கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கர்நாடகாவில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாஜக, தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.