இந்திய ராணுவ வீரர் வீரமரணம்..! காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்தில் இருக்கிறது ஹார்ட்மண்ட் குரி கிராமம். இங்கு கடந்த சில தினங்களாக தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை தேடி வந்தனர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கேரன் செக்டார் பகுதியில் பதுங்கியிருந்த 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் இந்த தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்திருக்கிறார். மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.