ஆங்கிலேயர் கால பழக்கத்தை அவையில் மாற்றிய வெங்கையா நாயுடு..!
குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலேயே துணை ஜனாதிபதியும், மாநிலங்கள் அவையின் தலைவருமான வெங்கையா நாயுடு சில மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
அவையில் ‘ பணிவுடன்’ என்ற வார்த்தையை இனிமேல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும் குளிர் காலக் கூட்டத் தொடர், குஜராத் தேர்தல் காரணமாக தாமதமாக, தொடங்கியது. வழக்கமாக 21 நாட்கள் நடக்கும் கூட்டத்தொடர் இந்த ஆண்டு 14 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.
மாநிலங்கள் அவைக்கு வருகை தந்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு , மறைந்த எம்.பி.க்களுக்குஅஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதன்பின், அவையில் அமர்ந்த வெங்கையா நாயுடு, ஆங்கிலேயர் காலத்தில் இருந்த பழக்கங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். .
மாநிலங்கள் அவையை தொடங்கி வைத்து வெங்கையா நாயுடு பேசுகையில், “ நான் பணிவுடன் இந்த அவணங்களை சமர்பிக்கிறேன் என்று எம்.பி.க்கள் யாரும் கூறக்கூடாது. பணிவுடன் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். நான் ஆவணங்களை சமர்பித்து இருக்கிறேன் என்று மட்டும் கூறுங்கள்.
சுதந்திரமான தேசத்தில் வாழ்கிறோம். ஆதலால், பணிவுடன் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. என்னுடைய இந்த கருத்து என்பது உத்தரவு அல்ல, எம்.பி.க்களுக்கு ஒரு வேண்டுகோளாக ஆலோசனையாக கூறுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.