ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு, 144 தடை உத்தரவு உள்ளிட்ட கொரோனா கட்டுபாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 141 பேரும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 142 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், கேரளாவில் 57 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளிடவற்றை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் அனைத்து மாநில செயலாளார்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதியில் நிலவும் சூழல் பொருத்து நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேவை ஏற்படுமாயின், கூட்டம் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு கூட பிறபிக்கலாம் என்றும் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம் என்றும் சொல்லபட்டுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுபாடுகளை விதிப்பது குறித்து அந்தெந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவல், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில், அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம். அடுத்துவரும் பண்டிகைக் காலமான புத்தாண்டு, பொங்கல், மகர சங்கராந்தி ஆகியவற்றில் மக்கள் அதிகமாகக் கூடும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம் என்பதால் மாநிலங்களே கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிகுந்த விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து நிலையிலும் விழிப்புடன் இருந்து தயாராக இருக்க வேண்டும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கையிலும் சமரசம் செய்வதோ, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோ, சுணக்கம் காட்டுவதோ வேண்டாம். உள்ளாட்சிகள், மாவட்ட அளவில் கொரோனா பரவல், ஒமைக்ரான் பரவல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தகுந்த கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தவிர்க்க வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது