சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரான்ஸ் முதியவர்! ஹார்மோன் மாத்திரை கொடுத்த கொடூரம்!
பன்னிரெண்டு வயது சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த பிரான்ஸை சேர்ந்த முதியவர் ஒருவரை புதுச்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், குழந்தைகள் நலப்பாதுகாப்பு அமைப்புக்கும் புகார் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியாரி கக்னர் (60) என்பவர், கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சட்ட ரீதியான எந்த ஆவணங்களும் இல்லாமல் ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை தனது இல்லத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.
இரவிலும் தன்னுடனேயே படுக்க வைத்துக் கொண்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தி வருகிறார். அவரது தாயும் அதே வீட்டில் இருந்தாலும், மொழி பிரச்சனையாலும், பயத்தாலும், யாரிடம் சொல்வது என்ற விவரம் புரியாததால் அந்த சிறுமி தவித்துக் கொண்டிருக்கிறார்.
12 வயதே ஆன அந்த சிறுமிக்கு தொடர்ச்சியாக ஹார்மோன் மாத்திரிகளை தியாரி கக்னர் கொடுத்து வருகிறார். அதன் மூலம் அந்த சிறுமியை 20 வயதைக் கொண்ட பெரிய பெண் போல மாற்றியிருக்கிறார். இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியை மீட்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரை அடுத்து களமிறங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் தலைவி வித்யா ராம்குமார், அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட அந்த சிறுமியிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது, அந்த சிறுமி நடந்தவைகள் அனைத்தையும் வித்யாவிடம் கூறியிருக்கிறாள்.
ஆனால், அந்த முதியவரோ, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், அவளைத் தான் தத்தெடுத்தருப்பதாகவும் கூறியிருக்கிறார். கண்ணங்கள் உள்ளிட்ட பகுதகளில் முத்தமிடுவது பிரான்ஸ் கலாசாரத்தின்படி தவறு கிடையாது என்றும் வாதிட்டிருக்கிறார்.
ஆனால், சிறுமியின் தாயாரோ, தன் பெண்ணை இவர் தத்தெடுக்கவில்லை. மருந்து உதவிகளை செய்வதாகச் சொல்லியே தங்களை தங்க வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் தாய் கூறியிருக்கிறார்.
முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகள் நல அமைப்பினர், போலீசுக்கு புகார் அளித்தனர். புகார் குறித்து போலீசார் அமைதி காத்து வந்தனர். இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்த நிலையில், முதியவர் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரின் நடவடிக்கையால் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் அடிப்படையில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.