ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பல டன் பொருட்கள் வாங்கியிருப்போம். ஆனால், இப்போது ஒரு டன் ரூபாய் நோட்டு 250 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது என்பது தெரியுமா?
500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றி வருகின்றனர். அதற்கு பதிலாக புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ரூ.23,000 கோடி மதிப்பிலான ரூ.500, 1000 நோட்டுக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டது. இந்த நோட்டுகள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு நாட்டிலுள்ள 3 மையங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளன.

அங்கு அவை துண்டு துண்டாக வெட்டப்பட்டு வருகின்றன. வழக்கமாக திரும்பப் பெறப்படும் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி எரித்து விடுவது வழக்கம். தற்போது ரூபாய் நோட்டுகளை எரிப்பதற்குப் பதில், துண்டு, துண்டுகளாக கூறு போடப்பட்ட நோட்டுகளை வேறு வழியில் பயன்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அதன்படி, வெட்டப்பட்ட 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பிளைவுட் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள வெஸ்ட்ர்ன் இந்தியா பிளைவுட் என்ற நிறுவனம் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கியுள்ளதாம். இதுவரை சுமார் 140 டன்னுக்கும் அதிகமான பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் இந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை மிஷின்கள் மூலம் அரைத்து, அதனை கூழாக்கி, பிளைவுட் செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.

ஒரு வாரத்திற்கு 40 டன் பயன்பாடற்ற ரூபாய் நோட்டுக்களை இந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அளித்து வருகிறது. இதற்காக டன் ஒன்றிற்கு ரூ.250 ஐ இந்நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு விலையாக தருகிறது. சோதனை முயற்சியாக பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 10 முதல் 15 பைகள் அரைக்கப்பட்டு,பிளைவுட் தயாரிப்பதற்கான கூழ் தயாரிக்கப்பட்டு, பிைளவுட் தயாரிக்கும் பணிகள் வெகுஜோராக நடைபெற்று வருகின்றன.
