பிராமணர்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பதவி பறிப்பு - முதல்வர் அதிரடி நடவடிக்கை
பிராமண சமூகத்தினரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக, ஒடிசா மாநில விவசாயத்துறை அமைச்சர் தாமோதர் ராவத்தை, அந்த மாநில முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக் பதவி நீக்கம் செய்துள்ளார்.
ஒடிசாவில் விவசாயத்துறை அமைச்சராக பதவி விகித்து வந்தவர், தாமோதர் ராவத். அவர், மல்கங்கிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், கடந்த 17-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "எத்தகைய சூழல் உருவானாலும் பழங்குடிகள் யாரிடமும் யாசகம் வேண்டுவதில்லை. ஆனால், பிராமண சமூகத்தினர் தேவை ஏற்படும்போது யாசகம் வேண்டுகின்றனர்’’ என தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
அமைச்சரின் இந்த பேச்சு அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிராமண சமூகத்தினர், அமைச்சர் ராவத் நபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்ற வலியுறுத்தினர். முதலில் தான் பேசியதற்கு மன்னிப்பு கோர முடியாது என்று கூறிய அமைச்சர், பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து, தாமோதர் ராவத்தின் பேச்சைக் கண்டித்த முதல்வர் நவீன்பட்நாயக், அவரை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நவீன் பட்நாயக் விடுத்த அறிக்கையில் ‘‘எந்த ஒரு மதம், ஜாதி, மொழி பேசும் மக்களுக்கு எதிராக பேச, யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற செயல்களை சகித்துக் கொள்ள முடியாது. எனவேதான், தாமோதர் ராவத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாமோதர் ராவத் நீக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, அவரும் ஏற்றுக்கொண்டார்’’ என்றார்.
தாமோதர் ராவத் நீக்கப்பட்டுள்ளதை, எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியினரும் வரவேற்றுள்ளனர். தாமோதர் ராவத், இதற்கு முன்பும் பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
ஆளும் பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த தலித் சமூகத் தலைவரை பற்றியும் தவறாக விமர்சித்தாக புகார் எழுந்தது. இதுமட்டுமின்றி விவசாயிகள் தற்கொலை, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றியும் அவர் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.