கருப்பு பணத்தை டெபாசிட் செய்த தமிழக அரசியல்வாதி? வருமானவரித்துறை “ரெய்டில்” அம்பலம்!
கருப்பு பணம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் நடத்தி வரும் சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதி ஒருவர் ஒரே பரிமாற்றத்தின் மூலம் ரூ.246 கோடி டெபாசிட் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டு, ஊழலை ஆகியவற்றை ஒழிக்க பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்களில் டெபாசிட் செய்து, புதிய நோட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சூழலைப் பயன்படுத்தி, நாடுமுழுவதும் ஏராளமான வசதி படைத்தவர்கள், ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்து வெள்ளையாக மாற்றியது தெரியவந்தது. அதைக் கண்டுபிடித்த வருமானவரித்துறை சந்தேகத்துக்கு உரிய வங்கிக் கணக்குகளை முடக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் சந்தேகத்துக்கு உரிய வகையில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து வருமான வரித்துறையினர் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், பல்வேறு வங்களில் கணக்கு வைத்துள்ள 27 ஆயிரத்து 739 பேரின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்கு உரிய வகையில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்களுக்கு இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் ஒரே பரிமாற்றத்தில் ரூ.246 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளது இப்போது அம்பலமாகிஇருக்கிறது.
இது குறித்து வருமானவரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில், பல்வேறு வங்கிகளில் 27 ஆயிரத்து 739 பேரின் வங்கிக்கணக்குகளில் அளவுக்கு அதிகமாக பணம் ெடபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு மின்அஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதி ஒருவர் வங்கிநேரம் முடிந்தபின், ரூ.246 கோடியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். ரூபாய் நோட்டு தடைகாலத்தில் தமிழகத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச டெபாசிட்களில் இதுவும் ஒன்றாகும். அவருக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு பின், அவர் பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தில் சேர ஒப்புக்கொண்டார். அதன் படி அவருக்கு 50 சதவீதம் அபராதம், வரி அனைத்தும் போக மீதமுள்ள பணம் 4 ஆண்டுகளுக்கு வட்டியின்றி வைப்புத்தொகையாக வைக்கப்படும்.
வருமானவரித்துறை நடத்தும் 2-வது கட்ட ஆய்வாகும். நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு இதுவரை 18 ஆயிரத்து 220 பேர் பதில் அளித்துள்ளனர். அதில் ஒன்று கூட திருப்தியாக இல்லை. மற்றவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.
மேலும், 440 வங்கிக்கணக்குகளில் ஒட்டுமொத்தமாக ரூ.240 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த 440 பேரின் விவரங்கள் ஏதும் இல்லை. அவர்களிடம் இருந்து வங்கிகள் கே.ஓய்.சி. ஆவணங்களையும் வாங்கவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மட்டும் ரூ.3600 கோடி சந்தேகத்துக்கு உரிய வகையில் வங்கிகளில் டெபாசிட் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலும் ரூபாய் நோட்டு தடை காலத்தை பயன்படுத்தி, பணத்தை ெடபாசிட் செய்தது வர்த்தகர்கள்தான் அதிகம்” என்று தெரிவித்தார்.
ஆம், அந்த முக்கியஅரசியல் புள்ளி யாராக இருக்கும்…