திருப்பதி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டுக்கு சிறப்பு தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டான ஜனவரி 1ந்தேதி சிறப்பு தரிசனம் ஏதும் நடத்தப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.
சுற்றறிக்கை
ஆந்திர மாநிலத்தில் கோயில்களை நிர்வாகம் செய்யும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்து தர்ம பரி ரக்ஷன அறக்கட்டளையின் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது-
சிறப்பு ஏற்பாடுகள்
அதில் “ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது, புத்தாண்டை வரவேற்று பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடைகளும் கோயில் நிர்வாகம் சார்பில் பெறப்படுகிறது.
தடை
ஆனால், இந்து மற்றும் தெலங்கு மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தின்படி, ஜனவரி 1ந் தேதி புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் கிடையாது. தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டு என்பது ஏப்ரல் மாதம் வரும் உகாதி பண்டிகையாகும்.
ஆதலால், ஜனவரி 1ந்தேதி வரும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று லட்சக்கணக்கில் செலவு செய்து, மலர் அலங்காரம், பேனர்கள் வைப்பது இந்து பாரம்பரியம் கிடையாது. அவ்வாறு செய்யக்கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உத்தரவு
இந்த உத்தரவு அனைத்து பெரிய, சிறிய கோயில்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர்கள், துணை ஆணையர்கள், மேலாளர்கள் போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறப்பு ஏற்பாடுகள் இல்லை
இந்த உத்தரவின் அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்பான அனைத்து கோயில்களிலும் எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட மாட்டாது என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி நேற்று அறிவித்தார்.
உகாதிக்கு உண்டு
இதுகுறித்து திருமலையில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில் “ முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்பேரில், வரும் ஜனவரி 1-ம் தேதி ஏழுமலையான் கோயில் உட்பட தேவஸ்தானத்தின் பிற கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், வரும் உகாதி பண்டிகைக்கு புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.