புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளா? இல்லவே இல்லை என்கிறார் சக்திகாந்த தாஸ்…
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட்டது போல் புதிதாக 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வழியாக, திரும்பப் பெறப்பட்டு, ரிசர்வ் வங்கி கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.
அதே நேரத்தில் பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டன.
இந்நிலையில் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளதாகவும், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த புதிய நோட்டுக்களை விரைவில் வெளியிடலாம் என்றும் தகவல் வெளியானது.
மேலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் இப்படித்தான் இருக்கும் என்ற வகையில், புதிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், புதிய 1000 ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் திட்டம் தற்போது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
