‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ பற்றி எந்த நாடும் வாயே திறக்கவில்லை - இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம்...
பாகிஸ்தான் எல்லை தாண்டிய இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிகல் ஸ்டிரை’(துல்லியத் தாக்குதல்) மூலம், தன்னை காத்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்கமாட்டோம் என்பதை நிரூபித்துள்ளோம். நாங்கள் நடத்திய இந்த துல்லியத்தாக்குதல் குறித்து எந்த நாடும் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்று பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் பெருமையுடன் பேசினார்.
அமெரிக்க பயணம்
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் மாலை பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடன், வர்த்தக தலைவர்கள், முக்கிய வி.ஐ.பி.க்களுடன பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
டிரம்புடன் சந்திப்பு
மேலும், அதிபர் டிரம்பை இன்று சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் இரு நாடு ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம், விமானக் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், வௌ்ளை மாளிகையில், பிரதமர் மோடிக்கு சிறப்பான விருந்து அளிக்கிறார் அதிபர் டிரம்ப்.
இந்தியர்களுடன் பேச்சு
இதற்கிடையே நேற்று இரவு விர்ஜினியா நகரில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது-
தீவிரவாதம்
நம் நாட்டின் இயல்பு வாழ்க்கையையும், அமைதியையும் சீர்குலைக்கும் தீவிரவாதத்தின் முகத்தை உலகுக்கு வௌிக்காட்டியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதம் பற்றி நாம் பேசினோம். அப்போதெல்லாம் தீவிரவாதம் என்றால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று நினைத்துக்கொண்டு புரியாமல் இருந்துவிட்டோம். இப்போது தீவிரவாதிகள் தீவிரவாதம் என்றால் என்ன என்று உணர்த்துகிறார்கள்.
துல்லியத்தாக்குதல்
இந்தியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, அங்கு இந்திய ராணுவம் நடத்திய துல்லியத்தாக்குதலை உலகம் அறிந்திருக்கும். இந்திய ராணுவத்தின் வலிமையையும் உணர்த்தி இருக்கிறோம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால், நம்மை காத்துக்கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உயர்வோம். தீவிரவாதத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள அனைத்து பாதுகாப்பையும் செய்வோம்.
கேள்வி கேட்கவில்லை
பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல் குறித்து உலக நாடுகள் யாரும் இந்தியாவை கேள்வி கேட்கவில்லை.
வாசுதேவ குடும்பம்
இந்தியாவுக்கு என பாரம்பரியம், கலாச்சாரம் இருக்கிறது. பண்பு இருக்கிறது. அதனால், சர்வதேச அமைதியை குலைத்து, தனது இலக்குகளை அடைய ஒருபோதும் முயற்சிக்காது. இந்தியா எப்போதும் சர்வதேச சட்டத்துக்கு பணிந்து செல்லும். அதுதான் வாசுதேவா குடும்பம்.அதாவது, உலகமே ஒரு குடும்பம்.
இந்தியா சர்வதேச சட்டங்களை தீவிரமாகப் பின்பற்றி, தனது இறையான்மையையும், பாதுகாப்பையும், அமைதியையும் உறுதிப்படுத்துகிறது. மக்களுக்கான நாட்டுக்கான வளர்ச்சியை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.