‘கார்டு வேண்டாம்’- ‘பணமா கொடுங்க’….ஜனாதிபதி தேர்தலில் மோடியின் ‘டிஜிட்டல் பிரசாரம் மிஸ்ஸிங்’….
ரூபாய் நோட்டு தடைக்குபின், மத்தியஅரசு டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது, ஆனால், ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுத் தாக்கலில் கார்டு மூலம் பணம் செலுத்தக்கூடாது, ரொக்கமாகவை வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 24-ந்தேதியோடு முடிகிறது. இதையடுத்து, புதிய குடியரசு தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வௌியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 14-ந்தேதி முதல் வரும் 28ந் தேதிவரை வேட்பு மனுத்தாக்கலும், 30-ந்தேதி மனு பரிசீலனையும் நடக்கும்.
தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஜூலை 17-ந்தேதி தேர்தலும், 20-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
வேட்புனுத் தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், பிரமத்ர மோடி தலைமையிலான மத்தியஅரசு நாட்டுமக்களிடம் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவித்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை
ஜனாதிபதி தேர்தல் விதிமுறையின்படி, தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்பவர்கள், தங்களின் டெபாசிட் தொகையை ரொக்கப்பணமாகவே செலுத்த வேண்டும். இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்தில் வங்கி அதிகாரி ஒருவர் இருப்பார். வேட்புமனுத் தாக்கல் செய்பவர்கள் அளிக்கும் பணத்தை எண்ணி, நோட்டுக்களை சரிபார்க்கும் பணியில் அவர் ஈடுபடுவார். அல்லது, ரிசர்வ் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து, அதற்கான ஆவணத்தை வேட்புமனுவில் இணைக்கலாம்.
ஆனால், காசோலையாகவோ அல்லது டிஜிட்டல் பேமெண்ட் மூலம் டொபாசிட் தொகை ஏற்கப்படாது. இதுவரை 15 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்து அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்ககது.