No crackers in delhi at deepavali
டெல்லியில் பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தீபாவளியன்று மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
வரும் 18 ஆம் தேதி நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே, பட்டாசுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால் வரும் தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.
இந்த தடை விதிப்பதன் மூலம் காற்று மாசு படுவதில் மிகவும் மோசமான இடத்தைப் பிடித்துள்ள டெல்லி அதிலிருந்து மீண்டு வருமா என சோதித்துப்பார்க்க விரும்புவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வரும் நவம்பர் 1 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் நீதிபதிகள் தடை விதித்தனர்.
இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதே நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தீபாவளியன்று மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இது குறித்து தெரிவித்த நீதிபதிகள், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடைக்கு சிலர் மதச்சாயம் பூசுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தனர்.
